cinema

img

உலகம் பார்த்த சினிமா-“காலத்தை வென்றவன் நீ; காவியமானவன் நீ...”

பிரெஞ்ச் நாவலாசிரியரும் நாடக இயக்குநருமான  ஃபுளோரியன் செல்லர் இயக்கியுள்ள ஆங்கிலத் திரைப்படம் தி ஃபாதர் The Father. தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்ற பிரெஞ்ச் நாடகத்தை செல்லர் திரைப்படமாக உருவாக்கம் செய்துள்ளார். படம் உலகளாவிய முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சனையை உள்ளத்தைத் தொடும் வகையில் பேசுகிறது. வசனங்களைவிட காட்சிகளால் சொல்லப் படும் விதத்தில் படம் பார்வையாளர்களைப் பேச்சிழக்கச் செய்கிறது. 80 வயதான ஆந்தனி ஒரு ஓய்வுபெற்ற பொறியாளர். மனைவியை இழந்தவர். மேற்கு லண்டனில் வசதியான அடுக்ககம் ஒன்றில் தனியே வசிக்கிறார் டெமன்சியா (Dementia) எனும் மறதி நோயால் கடுமையாகப் பீடிக்கப்பட்டுள்ளார். அவரது மகள் ஆன் இவரை வந்து, வந்து கவனித்துக் கொள்கிறாள். தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவள்; என்றாலும் அவரது முரட்டுத்தனமான அணுகுமுறையும் முசுடுக் குணமும் அவளைக் காயப்படுத்துகின்றன; தந்தை மீதுகொண்ட பாசத்தால் அவற்றைப் புன்னகையில் புதைக்கிறாள்; கண்ணீரில் களிம்பிட்டுக் கொள்கிறாள்.ஆனால் அவரைக் கூட இருந்து கவனிக்க நியமிக்கப்பட்ட பெண் உதவியாளர்கள் விலகி விடுகிறார்கள். உதவியாளரிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; தான், பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு பாரீசில் போய் இருக்கப் போவதாகவும்; வாரமொருமுறை வந்து அவரைப் பார்த்துக் கொள்வதாக வும் தந்தை ஆந்தனியிடம் ஆன் கூறுகிறாள். காலம், சூழல் மாற்றங்களில் ஆந்தனி தன்னுணர் வின்றிப் போகிறார்; அது மட்டுமின்றி பொருட்கள், இடம் குறித்தும் அவருக்கு குழப்பம் ஏற்படுகிறது; இல்லாத மனிதர்களை இருப்பதாகவும் உரையாடுவதாகவுமான பிரமைக் காட்சிகள் ஆகியவற்றில் மறதி நோயாளியான ஆந்தனியுடன் பார்வையாளர்களும் திணறுகிறோம். இயக்குநர் செல்லர் மூளைக்குள் ஆந்தனி கூடுவிட்டுக் கூடுபாய்ந்து செய்யும் மாயவித்தை என நினைக்கத் தோன்றுகிறது.

மெய்ம்மைக்கும், பிரமைக்கும் இடையே பேதலித்த ஆந்தனியின் உலகத்துக்குள் நம்மை ஈர்த்துக் கொள்வது தான் இப்படத்தின் தனிச் சிறப்பு. கைக்கடிகாரத்தை வைத்துக் காலநேரத்தையும் மனைவியின் ஓவியம், அறைகலன்களை வைத்தே இடத்தையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆந்தனியின் நினைவாற்றல் சீர்கேடு அடைகிறது. சூழ்நிலைகளின் மாறுதல்களை உள்வாங்கித் தொடர முடியாமல் காரண காரிய அறிவு உறைந்து போன நிலை. பல தருணங்களில் முதியோர் சிலரை “உமக்கென்ன மூளை வறண்டு போச்சா?” என்று குடும்பத்தினரே கடிந்து கொள்வதைக் கேட்டிருக்கிறோம். ஷேக்ஸ்பியரின் “லியர் அரசன்”நாடகத்தில் லியர் மனம் பேதலித்தவன் ஆவான். ஆனால் தனக்கு என்ன நடந்தது; என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வு அவனுக்கு இருக்கும். ஆனால் ஆந்தனிக்கு இது அவ்வப்போது வெளிப்படுவதாக இருக்கிறது. தனது முரட்டு சுபாவத்தால் தன் மகள் மனம் புண்பட்டதை உணர்வதும் அதற்காக அவளிடம் மனம் வருந்தி ஆந்தனி மன்னிப்புக் கோருவதும் அவரது ஆழ்மனதின் தன்னுணர்வை வெளிப்படுத்துகிறது.இறுதிக் காட்சியில் அவர் தன் தாயை நினைத்துத் தேம்பி அழுவதில், வாழ்வின் வேதனையெல்லாம் உருத்திரண்டு உச்சம் பெற்றது போல் இருக்கிறது. முதிய தந்தையாக நடிக்கும் ஹாப்கின்சின் உன்னதமான நடிப்புக்கு இணையாக மகளாக நடிக்கும் ஒலிவியா கால்மன் ஜொலிக்கிறார். மறதிநோய் பீடித்த தந்தையை விட்டுப் பிரிய மனம் ஒருப்படவில்லை; அதேவேளை மணவாழ்வு என்ற எதிர்காலம் காதலன் வடிவில் கட்டாயப்படுத்துகிறது.இருவேறு துருவ உணர்வோட்டங்களுக்கிடையே தத்தளிக்கும் பாத்திரத்தில் ஒலிவியா உன்னதமான நடிப்பைத் தந்துள்ளார்.

மறதிநோய் மூளையின் நியூரான் செல்களின் செயல்பாடு மந்தமடைவதால் ஏற்படுகிறது. மூளைக்கு மருந்து செலுத்தி நோய் தீர்க்கும் மருத்துவம் இதுவரை இல்லை; ஆனால் தனிமையை விடுத்து தொடர்ந்து படிப்பது மட்டுமின்றி சமூக சிந்தனையும் ஈடுபாடும்தான் மறதிநோய்க்கு எதிரான தடுப்பு மருந்து. 96 வயதுவரை வாழ்ந்த தந்தைபெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் மரணத்துக்கு முந்திய நாள்வரை மேடையில் முழங்கியவர்கள். கலைஞர் கருணாநி்தி அவர்கள் 90 வயதுக்கு மேலும் நல்ல நினைவாற்றலோடு அரசியலிலும் இலக்கிய தளத்திலும் இயங்கியவர். இந்தப் படம் முதுமையின் துயரவாழ்வைச் சொல்வ தோடு நின்று விடுகிறது. ஆனால் “அழகிய அடர்வனம் மனதை ஈர்க்கும் ஆனால் என்னைக் கடமைகள் அழைக்கும் துயிலெனைத் தழுவிடும் பொழுதுக்கு முன், நான் போகவேண்டும் நெடுந்தூரம்; போகவேண்டும் நெடுந்தூரம்” என்ற ராபர்ட் ஃபிராஸ்ட்டின் கவிதை வரிகள்தான் நினைவில் வருகின்றன.